Tuesday, June 30, 2020

தொடரோட்டம்

      


                             




"விக்னேஷ்.. நீங்க லீடரா இருக்கிற இந்த ப்ராஜெக்ட்ட நீங்களே ஒப்புக்கொண்ட நேரத்துக்குள்ள முடிக்கல. அதனால க்ளையன்ட்கிட்டேர்ந்து எங்களுக்கு கம்ப்ளைன்ட்ஸ் வருதுஇதுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க?” 

ப்ராஜக்ட் மேனேஜர் கீர்த்திவாசனின்  குரல் சற்று கோபமாக ஒலித்தது.

காலையில்  இப்படி ஒரு மீட்டிங் விக்னேஷ்   எதிர்பார்த்ததுதான் என்றாலும் அதனை   வெளிக்காட்டிக் கொள்ளாமல் இப்போதுதான் கேள்விப்படுகின்ற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு.. மனதிற்குள்ளேயே ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த பதிலை கோர்வையாக சொல்ல தன்னை தயார்படுத்திக் கொண்டும் இருந்தான்.

இந்த சூழ்நிலையை அழகாக சமாளித்து தனக்கும் சாதகமாக்கிக் கொள்ள விரும்பினான் விக்னேஷ்.

அந்த நேரம்  பார்த்து  கீர்த்திவாசனின்  செல்போன் சிணுங்கியது.

 கீர்த்திவாசன் பேசுவதை நிறுத்திவிட்டு போனை பார்த்தார்.      

க்ளையன்ட் நம்பர்.

 "விக்னேஷ், கொஞ்சம் வெளிய  வெயிட்  பண்ணுங்கஎன்று கூறினார்.விக்னேஷ் வெளியேறியதும் போனை எடுத்த கீர்த்திவாசன்...

“ஹலோ குட்மார்னிங் சார்....”  

இதுபோல் கிளையன்ட்டிடம் பேசிய அனுபவங்கள்  நிறைய  இருப்பதால் பொறுமையாக சொல்லிவிட்டு  எதிர் முனையில் பேசுவதை கவனித்து கேட்டார்.

“ஓகே சார்... உங்களுக்கு அவசரமா தேவைப்படறதுனு புரியிது சார்...  அதனாலதான் நாங்க உங்களோட ப்ராஜெக்ட்டை   சீக்கிரமா முடிக்க  நடவடிக்கை எடுத்துட்டோம்...இப்போ பாத்தீங்கன்னா டீம்ல புதுசா பத்து பேரை சேத்திருக்கோம்....இந்த மாசத்துக்குள்ள ப்ராஜக்ட் கண்டிப்பா முடிச்சி குடுத்துடுவோம் சார்...தேங்க்ஸ் சார்...ஓகே சார்.... நோ ப்ராப்லம் சார் ... அடுத்த  ப்ராஜக்ட்டை இன்னிக்கே ஒப்பந்தம் போட்டுக்கலாம் சார்...தேங்க்யூ வெரிமச் சார்” 

சாமர்த்தியமாக பேசி ஒரு மாதம் அவகாசமும் வாங்கிவிட்டு  புது ப்ராஜக்ட்டும் வாங்கியதால் 
சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ளும் தன்  திறனை நினைத்து   பெருமிதத்துடன்   போனை  வைத்து  விட்டு...  மீண்டும் ப்ராஜெக்ட்  லீடர் விக்னேஷ்க்கு போன் செய்து உடனடியாக தன்னை சந்திக்க அழைத்தார்.


மேனேஜரிடமிருந்து அழைப்பு வரவே... மீண்டும் அவர் அறைக்கு சென்று அவர் அனுமதியுடன்  எதிரிலிருந்த  நாற்காலியில் அமர்ந்த விக்னேஷ்,   சிறிதும் பதறாமல் தன்னுடைய பக்க நியாயங்களை எடுத்துக் கூற தொடங்கினான்.

"சார்.. ப்ராஜக்ட் கை நழுவி போய்டக் கூடாதேன்னு முடிக்க வேண்டிய தேதியை மிகக் குறைவாக குறிப்பிட்டு விட்டேன்அதுவும் இந்த ப்ராஜக்ட்ல நுணுக்கமான வேலைகள் அதிகமாக இருக்குமேலும்... போதுமான ரிசோர்ஸ் இல்ல.. பத்து பேர் செய்ய வேண்டிய வேலய ஆறு பேர் பண்றாங்க சார்இத நான் ஏற்கனவே உங்க கிட்ட சொல்லி இருக்கேன் சார்.  டெவெலப்மென்ட் டீமே    க்வாலிடியையும்  டெஸ்ட்  பண்றாங்க, க்ளையன்ட்  வேற அடிக்கடி மாற்றங்கள் நிறைய கேட்கறாங்க சார் , அதனால  திரும்ப திரும்ப ரீவொர்க் பண்ண வேண்டியதாக இருக்கு. இன்னொரு  விஷயம்  என்னனா...  இந்த டீம்ல இருக்கிறவங்களுக்கு சம்பள உயர்வு  கிடைக்காததால  டீமோடிவேட்டட் ஆக இருக்காங்க சார். "

என்று விக்னேஷ் சொல்லியதும்,சற்று நேரம்     யோசித்த ப்ராஜெக்ட் மேனேஜர்.... 

 "சம்பள உயர்வு சம்மந்தமா நான் கண்டிப்பாக பரிந்துரைக்கிறேன்... அப்புறம் ...இன்னும் நாலு பேரை புதுசா உங்க டீம்ல சேக்கறேன்...ஆனால் நீங்க  இந்த ப்ரொஜெக்ட்டை     ரெண்டு வாரத்துல முடிக்கனும்.   இப்போ  நீங்க கிளம்பலாம்  விக்னேஷ்" 

 மேனேஜரை சமாளித்து  சம்பள உயர்வுக்கும்  வழி செய்தாகிவிட்டது இரண்டு வாரம் அவகாசமும் வாங்கியாகிவிட்டது ... மேலும்  நால்வர் சேர்வதால் வேலை ப்ளூவும்  குறையும் பலவாறு யோசித்து வெற்றிகரமான புன்னகையுடன் வெளியே வந்தான் விக்னேஷ்.


இரவு விக்னேஷ் வீட்டில்....

"என்ன டியர்  இப்பதான் சமைக்கிறயா?ரொம்ப பசிக்கிதும்மா " 

கெஞ்சிய விக்னேஷிடம் சற்றும் பதறாமல் நிதானமான குரலில்...

" சாரிங்க....இட்லி மாவு அரைக்க ஊறப்போட்டேன்....  காலைல போன கரண்ட் குழந்தைங்க ஸ்கூல் விட்டு வந்த பிறகுதான் வந்துச்சு.....நம்ம வீட்டுல தான் உதவிக்கு யாரும்   கிடையாதேங்க...    குழந்தைங்களுக்கு வீட்டுப்பாடம் நிறைய 
குடுத்துட்டாங்க... அதனால அவங்களுக்கு வேற உதவி பண்ணனும்....

நீங்களே சொல்லுங்க ...ஒருத்தரே பாத்திரங்களை தேய்ச்சு குழந்தைகளுக்கும் படிக்க வைத்து....   சமைக்கனும்னா லேட் தானேங்க ஆகும்?  நீங்க ஒண்ணும்  டென்ஷன் ஆகாதிங்க.நீங்களும் கொஞ்சம் உதவி செஞ்சீங்கன்னா சட்டுபுட்டுனு சமைச்சிடலாங்க"   

மனைவியின் வார்த்தைகளில் இருந்த நியாயங்கள் புரிய 
"சரிம்மா நான் உதவி பண்றேன்...சீக்கிரமா வேலைக்கு யாராவது கிடைக்கறாங்களானு விசாரிப்போம் " 

கணவனை சமாளித்து வேலையும் வாங்கி... வீட்டு வேலைக்கும் ஒருவரை நியமிக்கவும் ஒப்புதல் வாங்கிய மகிழ்ச்சியில் சமையலறை நோக்கி துள்ளி ஓடினாள் விக்னேஷின் மனைவி. 
                 


2 comments: