Thursday, July 2, 2020

ஒரே வானம்



அது ஒரு ஷாப்பிங் மால்.

பல வடிவங்களில் அலங்கார விளக்குகள் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன.தலைக்கு மேலே மயிலிறகு போல் பல வண்ணங்களில் கண்களையும் கருத்தையும் கவரும் வண்ணம் வித விதமான ஓவியங்கள் விளக்கொளியில் மின்னிக் கொண்டிருந்தன.

விலையுயர்ந்த மரத்தாலான  கதவுகளில் வேலைப்பாடுகளும்,காதிற்குள் உரிமையாய் நுழையும் மனதை வருடும் மெல்லிய வெஸ்டர்ன் மியூஸிக்கும்,மற்றும் குளிர்சாதனத்தின் குளுகுளு காற்றில் கலந்து வந்த நறுமணமும், பாலிஷ் போடப்பட்டு  தூய்மையான பளிங்குத்தரையும் அங்கு  நடமாடும் மேல்நாட்டவர்களின் அழகிய ஷூக்களும், செருப்புகளும் உரசும் சப்தங்களும்...

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கால் பதித்தவுடன்  மனதில் எங்கிருந்தோ  கர்வமும் கம்பீரமும் ஓடி வந்து ஒட்டிக் கொள்ள ஒரே நொடியில்  கோபாலை மிடுக்கான நடைக்கு தானாக மாற்றியது.

இந்த நாட்டிலேயே நிரந்தரமாக தங்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நினைக்கும் போதே பெருமூச்சு வந்தது கோபாலுக்கு.

‘கோவாலு...நம்ம ஊட்லயே மொத ஆளா வெளிநாடு போற நீயி..வெளி நாட்டுல ரொம்ப குளிராமே.. நம்ம ஊரு கம்பளிய மறக்காம எடுத்துக்கினு போ’ கிராமத்திலிருக்கும் ஆயா கூறியது இப்போது ஞாபகம் வர..தான் அணிந்திருந்த விலையுயர்ந்த ஜெர்கினை ஒரு முறை பார்த்தான்.மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

 திடீரென்று ஏனோ தன் அப்பா முன்பு பேசியது ஞாபகத்திற்கு வந்தது.

‘கோபால்..வெளிநாடு போற.. நல்லா டிரஸ் பண்ணனும் எல்லாம் சரிதான்..அதுக்காக துணிகள்ளாம் விலை அதிகமாக வாங்கி இருக்கியேப்பா. அந்த கடைல எதுக்கு வாங்கின? நாம எப்பவும் வாங்கற கடைல இந்த வாரம் தள்ளுபடி வேற போட்டிருக்கே பாக்கலயா நீ? இதே துணிமணிகளை விலை குறைவா  வாங்கியிருக்கலாமேப்பா’

அவனது புதுப்பெட்டியில் புதுத்துணிகளை சரியாக அடுக்கிவைத்துக் கொண்டே கேட்டார் அப்பா.

கல்லூரி முடிந்து  வேலைக்கு சேர்ந்த மூன்றாவது மாதத்திலேயே கம்பெனியில் ட்ரய்னிங் என்று ஒரு மாதம் வெளிநாட்டு பயணமாக கிளம்பிய கோபால் அப்பாவிற்கு பதில் சொல்லாமல் நின்றான்.அந்த 50% தள்ளுபடிக்காக கூட்டத்தில் மாட்டிக்கொண்டு நசுங்க கோபாலுக்கு பிடிக்கவில்லை. அதுவும் கஷ்டப்பட்டு தேடி தேடி நல்ல துணியாக பார்த்து எடுப்பதற்குள் கூட்டத்தில் நசுங்கி உயிரே போய்விடும் என்று தான் வேறு கடையில் வாங்கினான் கோபால்.

பணம் சம்பாதிக்க ஆரம்பத்ததிலிருந்தே கோபால் பொருட்களின் விலையை பற்றி அதிகம் யோசிப்பதில்லை. அப்பா ஏன் தான் இப்படி கணக்கு போடுகிறாரோ? இந்த மிடில் க்ளாஸ் குடும்பத்திலிருந்து எப்பதான் கணக்கு பாக்காத ஹை க்ளாஸ் குடும்பமா ஆகப் போறமோ? நினைக்கும்போதே ஒரே அலுப்பாக இருந்தது கோபாலுக்கு.

இதோ திரும்பிப் பார்ப்பதற்குள் வெளிநாட்டில் மூன்று வாரங்கள்  ஓடிவிட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை.

தன்னை ஆசையாய் வழியனுப்பிய உறவினர்களுக்கு ஏதாவது அன்பளிப்பு வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று தன் அலுவலகத்தில் இருப்பவர்களிடம் விசாரித்துக்கொண்டு இந்த மாலுக்கு வந்தான் கோபால்.

அந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலில்...

கடைகளில் இருந்ததை விட உணவகங்களில்  தான்  மக்கள் கூட்டம் சற்று அதிகம் இருப்பது போல உணர்ந்தான்.

ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினான் கோபால்.

தரமான, அழகான பொருட்கள் எல்லாம் எட்டாத விலையில் நின்று கோபாலை பயமுறுத்தின.

பல கடைகளில் வேலை செய்பவர்கள் மட்டுமே இருந்தனர்.இவனைக் கண்டதும்  ஓடோடி வந்து பலமாக வரவேற்றனர். அவர்களிடம் வேண்டாம் என்று சொல்வதற்கே அவமானமாக இருந்தது.

சில மணி நேர தேடல்களுக்குப் பிறகு...

மிடில் க்ளாஸ் குடும்பத்தில் பிறந்துவிட்டு  தற்போது கையில் இருக்கும் சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு   இந்த பணக்கார நாட்டில் என்ன வாங்குவது? மனதில் தோன்றிய தாழ்வு மனப்பான்மையால் நடையில் முன்பிருந்த மிடுக்கு குறைந்து தளர் நடையானது.

ச்ச என்ன வாழ்க்கை இது??

வருத்தத்தோடு நகரும் படிக்கட்டுகளில் திரும்பி செல்வதற்காக  கீழே இறங்கி கொண்டிருந்த   கோபால்  கீழ் தளத்தில்  ஒரே ஒரு கடையில் மட்டும் மக்கள் கூட்டம்  முண்டியடித்து கொண்டிருப்பதை பார்த்தான். அதன் வாயிலையும் தாண்டி நடைபாதை வரை மிடுக்கான உடையணிந்திருந்த பல வெளிநாட்டினர் நெருக்கியடித்துக் கொண்டிருந்தனர்.ஆச்சரியம் தாங்க முடியாமல் அங்கே சென்று கடையின் கண்ணாடி சுவற்றின் வழியாக  உள்ளே இருந்த பொருட்களை எட்டிப் பார்த்தான். மற்ற கடைகளில் இருந்த அதே பொருட்கள் தான் இங்கும் இருந்தன.

பிறகு ஏன்  இந்த கடையில் மட்டும் இவ்வளவு கூட்டம்?

குழப்பமாக கடையின் முன்பக்கம் ஓடி வந்தான்.

கடையின் வாசலில் வைக்கப்பட்டிருந்த போர்டை படித்து விட்டு மலைத்து நின்றான்.
.
அந்த போர்டில்...

‘இங்கே  விற்பனையாகும் எல்லாப்பொருட்களிலும் 30% தள்ளுபடி.இன்றே கடைசி நாள்’ என்றிருந்தது.

உலகம் முழுமைக்கும் ‘ஒரே வானம்’ தான் எனப்புரிய அவனுக்கு நெடுநேரம் பிடிக்கவில்லை.

அவன் அப்பாவின் வார்த்தைகள் மனதில் எதிரொலித்தன. அப்பாவின் கருத்துகள் மிக உயர்ந்தவை.  உலகப்பொதுமறை போல அனைவருக்கும் அவை பொருந்துவதை நினைத்து பெருமை கொண்டான். அவரை அலட்சியப்படுத்திய தன் அறியாமையை  உணர்ந்து வருந்தினான். ஊருக்கு சென்றதும் அப்பாவிடம் தன் தவறை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான்.பிறகே மனம் சற்று லேசாகியது.

புது உற்சாகத்துடன் கூட்டத்தில் தானும் சேர்ந்து பொருட்களை தேடித்தேடி எடுத்தான் பொறுப்புடன்.

   


Wednesday, July 1, 2020

கொடுத்து வைத்தவள்



கனகா...என்றாலே அந்த அபார்ட்மென்டில் வெகு பிரசித்தம்.அங்கு குடி வந்து ஐந்து மாதங்கள் தான் ஆகின்றது.

ரகு பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன் என்றாலும்..நான்கு வருடங்களாக சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பதால் அவனுக்கு சென்னைப்பட்டினத்தில் எல்லா இடமும் அத்துப்படி.

அவன் மனைவி கனகா படித்தவள் தான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் சற்று வெகுளி.

ரகுவின் பெற்றோர் இருவருமே பெங்களூரில் வேலை பார்ப்பதால் திருமணம் முடிந்த கையோடு ரகுவையும் கனகாவையும் சென்னையில் இந்த அபார்ட்மென்டில் குடிவைத்தனர்.

வீட்டு வேலைகள் நன்கு பழகியிருந்ததால் வெகு சீக்கிரமே...நறுவிசாக தனியாகவே குடும்பம் நடத்த பழகியிருந்தாள் கனகா.வீட்டு வாசலில் ரோஜா செடிகள் வைத்தாள்.அதில் பூக்கும் மலர்களை சாமிக்கு போட்டு அழகு பார்த்தாள்.

வீட்டிற்குள் உலவும் தேவதையாய் அவளை நேசித்தான் ரகு.அன்பு மனைவியின் பாசத்தில் கொஞ்சம் மாறித்தான் போனான் அவன்.மனதில்  உற்சாகம் பொங்கியது. விதவிதமான சாப்பாடு சுத்தமான வீடு ,அன்பான மனைவி என்று வாழ்க்கையின் ஆரம்பமே  மிக நன்றாக அமைந்துவிட்டது. அவனும் கனகாவிற்கு கூட மாட ஒத்தாசை செய்து அவள் சோர்ந்து விடாமல் பார்த்துக் கொண்டான்.

இப்படியொரு பொருத்தமா என்று பிறர் பார்த்து வியக்கும்படியான வாழ்க்கையில் இருவரும் போட்டி போட்டு கொண்டு அன்பை பெருக்கிக்கொண்டனர். ரகுவிற்கு மட்டும் சின்னதாக ஒரு எண்ணம் மனதில் அடிக்கடி தோன்றிகொண்டே இருந்தது.

அதாவது....இந்த ஐந்து மாதங்களுக்குள் அக்கம்பக்கத்து வீட்டினருடன் இவ்வளவு எளிதாக பழகுவது எப்படி அவளுக்கு சாத்தியமாயிற்று? கனகாவின் சிரித்த முகம் மற்றவர்களை சுலபமாக அவளிடம் பழக வைத்துவிடுகிறது. இது ரகுவிற்கு புதுமையாக இருந்தது.தன் அன்பு மனைவி அவளுடைய தாய் ,தந்தை மற்றும் உறவினர்களை  பிரிந்து முகம் தெரியா ஊரில் தன்னை மட்டுமே நம்பி இருக்கிறாள். அவளிடம் அக்கம்பக்கம் பழக வேண்டாம் என்று சொன்னால்...இந்த நான்கு சுவற்றுக்குள் வாழ அவள் ஒன்றும் சிறைக்கைதி அல்லவே...என்ற எண்ணம் தோன்றி அவனை தடுத்தது.

ஆனால் ...

“கனகா...எங்க வீட்ல பைப்ல தண்ணி வரல குடிக்கக்  கூட தண்ணி இல்லம்மா எங்க வீட்டுக்கார் ப்ளம்பர கூப்பிட போயிருக்கார் உங்க வீட்ல தண்ணி வருதா?” மாடி வீட்டு ஆன்டி பால்கனியிலிருந்து உரக்க கத்தியதும்...

“எங்க வீட்ல நல்லா தண்ணி வருதே ஆன்டி...குடிக்க தண்ணி இல்லன்னா உங்களுக்கு கஷ்டமாச்சே’  சொல்லிவிட்டு  ஒரு குடத்தில்தண்ணியை தூக்கிக்கொண்டு மாடிக்கு ஓடினாள் கனகா.

“கனகா இன்னிக்கு ஆபீஸ்லேர்ந்து வர லேட்டாகும்என் பையன் ஸ்கூல்லேர்ந்து வந்தா உங்க வீட்ல வெச்சு பாத்துகரியா?” என்ற  எதிர் வீட்டு அக்காவின் இரண்டாம் வகுப்பு படிக்கும்பையனுக்கு சாப்பிட டிபன் கொடுத்து வீட்டுப்பாடம் கூட முடிக்க வைத்துவிடுகிறாள் கனகா.

இதெல்லாம் கூடப் பரவாயில்லை...

ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பக்கத்து வீட்டு அங்கிளுக்கு நெஞ்சுவலி வந்து விட்டது என்று துடித்துப்போன கனகா தூங்கிக் கொண்டிருந்த ரகுவை உலுக்கி எழுப்பி டாக்ஸி பிடித்து வரசொன்னதோடு துணையாக மருத்துவமனைக்கும் அனுப்பி பணமும் கொஞ்சம் செலவழிக்க வைத்தாள்.

ஒரு பக்கம் அவளது குணம் உயர்வாக தோன்றினாலும் எல்லோரும் இவளை நன்றாக பயன்படுத்திக்கொள்கின்றார்களே என்று ஆதங்கமாக இருந்தது ரகுவிற்கு.

இந்நிலையில்...

ரகுவின் அலுவலகத்தில் இரண்டு வாரம் வெளிநாடு போக வேண்டி வந்தது.அதனால் கனகாவை பெங்களூர் அனுப்ப முடிவு செய்திருந்தான் ரகு. ஆனால் அதிர்ஷடவசமாக அவனுடைய அப்பா அம்மா லீவு எடுத்து கொண்டு சென்னைக்கு வருவதாக கூறினர்.

அப்பா அம்மாவை வரவேற்க தயாரானது வீடு. அவர்களுக்கு  என்னென்ன பிடிக்கும் என்று ரகுவிடம் கேட்டு தெரிந்து கொண்டாள் கனகா. காலையில் சாலட் ,மதியம் அளவான சாப்பாடு , மாலையில் சுண்டல் , இரவு கோதுமையில் செய்த  டிபன் என்ற எல்லா விவரத்தையும் ரகு சொல்ல கவனமாக புரிந்து கொண்டாள். ஜன்னல் திரைச்சீலைகளை மாற்றி வேகும் க்ளீன் செய்து  அந்த அறையை அழகாக தயார் செய்தாள்.பால் கவர் போடுபவரிடம் மேலும் ஒரு பேக்கெட் வேண்டும் என்று இப்போதே சொல்லி வைத்தாள்.

பெற்றோரை அழைத்துவர ரகுவுடன் தானும் ஸ்டேஷனுக்கு சென்றாள்.

ஒரு வழியாக ஸ்டேஷனிலிருந்து வீட்டிற்கு வந்ததும் அப்பா மிகவும் அசதியாக இருப்பதாக கூறியதால் அவர்களுக்காக ஒதுக்கிய அறைக்குள் அப்பாவை ஓய்வெடுக்கச்செய்தான் ரகு.

பெற்றோர் வந்ததும் கனகா பிஸியாகிவிட்டதால் அக்கம்பக்கத்தார்  தொல்லை இனி இருக்காது என்ற எண்ணம் தோன்ற,  நிம்மதியாக வெளிநாட்டிற்கு போய்விட்டு திரும்பிய போது.......

வீட்டு வாசலில் நுழையக்கூட இடமில்லாமல் அக்கம்பக்கத்தினர் அம்மா மற்றும் கனகாவுடன் கலகலவென்று பேசிக்கொண்டிருந்தனர்.

இவனை கண்டதும் கைகுலுக்கிவிட்டு “பயணம் நல்லா அமைஞ்சிதா?” என்று விசாரித்தனர்.

“நல்லபடியா அமைஞ்சிது.தேங்க்ஸ்” சம்பிரதாயமாக சிரித்த ரகுவிற்கு வீட்டிற்கு  உள்ளே செல்ல வழிவிட்டு ஒதுங்கினர்.

வீட்டிற்குள் நுழைந்தான் ரகு....

அங்கே மடிக்காமல் கிடந்த துணிகள் அடுக்காத செய்தித்தாள்கள் மற்றும் டீப்பாயிலிருந்த கழுவாத டீக்கோப்பைகளையும் டிபன் தட்டுகளையும் கண்டான். சட்டென்று ஞாபகம் வர சன்னல் வழியாக எட்டி பார்த்தான். நீர் ஊற்றாமல் காய்ந்து போன ரோஜா செடிகள் கண்டதும் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. அவனுக்கு தலை சுற்றியது.அடக்கடவுளே அக்கம்பக்கத்தினர் அப்பா அம்மாவையும் தொந்தரவு செய்கிறார்களே. இந்த அபார்ட்மென்டில் இருப்பவர்கள் நம்மை நன்றாக பயன்படுத்திக் கொண்டு போதாத குறைக்கு நம் வேலைகளையும் கெடுக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்து கொண்டு அப்பா எப்படி அமைதியாக இருக்கிறார்? அப்பா மிகவும் கண்டிப்பானவர் ஆயிற்றே. டிசிப்ளின் இருக்க வேண்டும் என்று மிகவும் வற்புறுத்துவாறே? அப்பாவின் அறைக்கதவு மூடியிருக்க சரி காலையில் அப்பாவிடம் இது பற்றி கண்டிப்பாக பேச வேண்டும்.இவர்களை பின்பு யார்தான் தட்டிக்கேட்பது.

ஆனால்.....இனி இங்கிருக்ககூடாது..வேறு வீடு மாற்றியே ஆக வேண்டும் என்று மனதில் தீவிரமாக நினைத்துக்கொண்டு தன் ரூமிற்குள் சென்றுவிட்டான் ரகு.

சற்று நேரத்தில் அனைவரையும் அனுப்பிவிட்டு உள்ளே  வந்த அம்மாவும் கனகாவும் ரகுவின் வாடிய முகத்தை கவனித்தனர்.

கனகாவின் முகமும் வாடியிருப்பதை பார்த்தான் ரகு.  “வாங்க,எதாவது சாப்பிடறீங்களா?”

இப்போதுதான் தன்னை விசாரிக்கும் மனைவியை நம்ப முடியாமல் பார்த்தான். அம்மா கையில் காபியுடன் வந்தார்.

“ரகு ரொம்ப டயர்டாக இருக்கயாப்பா?இந்தா காபி குடி”மெதுவாக பேசினார் அம்மா.

கடகடவென்று காபியை குடித்தான் ரகு. அவசரமாக டீப்பாயை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் கனகா. துணிகளை பரபரப்பாக மடித்தாள்.

கோபம் எட்டி பார்க்க “என்ன நடக்குது இங்க?  எனக்கு ஒண்ணுமே புரியல” மெதுவாக ஆனால் அழுத்தமாக கேட்டான் ரகு.

“நீ வெளிநாட்டில் இருந்த போது..அப்பாவுக்கு ஹார்ட்அட்டாக் வந்துவிட்டது”
அம்மா மெதுவாக சொல்ல...

“அப்பா...அப்பாவுக்கு...??? இப்போ எங்கம்மா அப்பா??? ஏன் எனக்கு போன் பண்ணல?”பதறிய ரகுவை கண்களில் கண்ணீர் பெருக பார்த்தாள் கனகா.

அம்மா தொடர்ந்தார்...

“ரகு நீ பயப்படும்படி எதுவும் ஆகல...அமைதியா இருப்பா” ரகுவை தன் தோளில் சாய்த்து கொண்டு…

“அப்பாவுக்கு வலி தாங்க முடியாமல் மயங்கி விட்டார். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை… கனகா பயந்து வாசலுக்கு ஓடிப்போய் ‘ஆன்டீ ஹெல்ப் பண்ணுங்க’  என்று ஒரு குரல் தான் கொடுத்தாள்...அவ்வளவுதான் இங்கிருப்பவர்கள் அனைவரும் ஓடோடி வந்தார்கள்.  அப்பாவை தூக்கி காரில்  வைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அட்மிட் செய்தார்கள்….எங்களிடம் பணம் கூட வாங்கிகொள்ளாமல்....அப்பாவை காப்பாற்றிவிட்டார்கள். அதுமட்டுமல்ல...டிஸ்சார்ஜ் ஆகும் வரை பக்கத்திலேயே இருந்தார்கள்...உனக்கு தெரியபடுத்தினால் நீ பதட்டமடைவாய் என்று உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று எங்களை தடுத்தார்கள்...மேலும் தினமும் நம் வீட்டிற்கு வந்து எங்களை தைரியப் படுத்தினார்கள்.இப்போது அப்பா நலமாக அறையில் உறங்கி கொண்டிருக்கிறார்.....நல்ல வேளையாக நாம் இந்த அபார்ட்மென்ட்ல குடி இருக்கோம்….....கடவுள் உனக்கு வசிக்க நல்ல இடமாக கொடுத்திருக்கிறார்….எவ்வளவு அருமையான மனிதர்கள் உன்னை சுற்றி இருக்கிறார்கள் தெரியமா? அடுத்தவர் ப்ரச்னை பற்றி அலட்டி கொள்ளாத மக்களுக்கு நடுவில் நல்லவர்களும் இருக்கிறார்களடா.....நீ ரொம்ப கொடுத்து  வச்சவன்டா….”.  நா  தழுதழுக்க  உடல் நடுங்க பேசும் அம்மாவின் கைகளை ஆதரவாக பிடித்து கொண்டான் ரகு.

குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் கனகா.தண்ணீர் குடித்து தொண்டையை அடைத்த துக்கம் குறைந்த நிலையில் புடவை முந்தானையில்  கண்களை துடைத்துக்கொண்டிருந்த தாயிடம்....

“அம்மா...கனகாதான் ரொம்ப ‘கொடுத்து  வைத்தவள்’ நான் இல்லம்மா...” சொன்ன ரகுவை குழப்பத்துடன் புரியாமல் பார்த்தார் அம்மா.

”ஆமாம் அம்மா...கனகா....நிறைய உதவிகளை அக்கம்பக்கத்தாருக்கு ஏற்கனவே செய்து  ‘கொடுத்து வைத்திருக்கிறாள்’...அந்த உதவிகள் தான் சரியான நேரத்தில் திரும்ப கிடைத்திருக்கிறது...அப்பாவின் உயிரை மீட்டு தந்திருக்கிறது...” என்றான் கண்களில் கண்ணீர் வழிய நன்றியுடன் கனகாவை பார்த்தவாறே.

மகனின் கண்களை துடைத்த அம்மா.கவலையுடன் நின்றிருந்த கனகாவின் கைகளை பற்றி பாசத்துடன் அவளை அணைத்து பெருமை பொங்க உச்சியில் முத்தமிட்டார்.