Thursday, March 22, 2018

பாட்டி கதை


"கனகாவுக்கு இன்னுமா கல்யாணம் பண்ணல?  பத்து வயசு ஆயிடுச்சே... " உறவினர்களின் வார்த்தைகளுக்கு விடையளிப்பது போல்  இரண்டே மாதத்தில் கல்யாணத்தை நடத்தினார் கனகாவின் தந்தை.

"ஏன்டி! குதிராட்டம் வளந்து இருக்க...  சிந்தாம சிதறாம வேலை செய்ய தெரியலையே...." திருமணம் முடிந்த மறுநாளே  மாமியார்  அங்கலாய்க்க  பளிச்சென்று  வேலைகளை செய்ய  பழகினாள் கனகா.

சமையல், வீட்டு பராமரிப்பு, உறவினர்களை உபசரிப்பது எல்லாவற்றையும் உற்சாகமாக செய்ய பழகி கொண்டாள்.

"எட்டு குழந்தைகள் அம்போன்னு உன் கணவர் விட்டுட்டு போய்ட்டாரே... மாமியாருக்கு வேற கண்ணு தெரியல... எப்படி தான் இதுகள கரையேத்த போறயோ?" ஊராரின் ஏளன பேச்சு காதில் எதிரொலிக்க.... கல்யாண சமையல்களுக்கு எடுபுடி வேலை பார்த்தவாறே கடைசி பிள்ளையின் குழந்தைகள் வரை வளர்த்து ஆளாக்கிவிட்டார் கனகா.

காலம் வேகமாக ஓடி கனகா பாட்டியின் நடையை தள்ளாட வைத்தன...ஆனால் உழைத்து வலுவான உடலும் மனமும் சற்று ஒத்துழைத்ததால்...

காலிங் பெல் சத்தம் கேட்டு தன்னுடைய பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்த பாட்டி கனகா....
மிக மெதுவாக நடந்து....கதவை திறந்தால்... பள்ளியிலிருந்து  தன் மகளை  அழைத்து வர  சென்றிருந்த   முதல் மகனின் மருமகளும் மூன்றாம்  வகுப்பு படிக்கும் பேத்தியும் நின்றிருந்தனர்....

மருமகள் வீட்டிற்குள் சென்றுவிட பேத்தி மட்டும் பாட்டியின்  அருகில் வந்தாள். அவளுடைய கண்கள் சிவந்து அழுதது போல இருந்தது.

"என்னடா கண்ணு? அழுதியா என்ன?"

"ஆமாம் பாட்டி... கணக்கு தப்பா போட்டுட்டேன்னு டீச்சர் திட்டிட்டாங்க... "

"டீச்சர்னா அப்படிதாம்மா கண்டிப்பாங்க.... உன் நல்லதுக்கு தானே சொல்றாங்க.... இதுக்கெல்லாம் அழ கூடாது...."

தலையை தடவியவாறு பாட்டி கனகா சொல்ல...

"நீ எப்பவும் இப்படி தான் பாட்டி சொல்லுவ...  உனக்கு என்னோட கஷ்டம்லாம் புரியாது...  ஏன்னா... நீ பழைய ஜெனரேஷன்..." என்று சொல்லிவிட்டு பதிலுக்கு கூட காத்திராமல் உள்ளே சென்ற பேத்தியை  கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார்  பாட்டி கனகா.

No comments:

Post a Comment