Thursday, March 12, 2026

ஆன்லைன் பூச்சாண்டிகள்

 7.

ஆன்லைன் பூச்சாண்டிகள்


ஆரவின் வருகைக்காக வீட்டை பளபளவென்று சுத்தம் செய்கிறாள் வசந்தி.முதன்முதலில் ஆரவ் பிறந்த செய்தி  யைக் கேட்டு அவள் எழுதிய கவிதை இன்று மனதில் அழகாக ஓடுகிறது.


புன்னகை பூக்கும் பிள்ளைச்செல்வமே...

பல்லில்லா ஈறுகள் தெரிய...


சின்னஞ்சிறு சிவந்த நாக்கு

சிரிப்பில் மேலண்ணத்தில் ஒட்ட...


கண்களை அகல விரித்து

காட்டிக்கொடுக்கிறாய் உன் கள்ளமனதை!!


மயிலிறகால் தீண்டுவதுபோல்

மயக்க வைக்கும் ஒரு பார்வை!!


மெத்தென்ற பூப்பாதங்கள்

மெல்ல தத்தி நடந்து வர...


பஞ்சு போன்ற கன்னங்களில் என் உதடுகளை

பதிக்க சொல்லி தூண்டில் போட்டு....


பூப்போல அள்ளி உன்னை

பாசத்துடன் கொஞ்ச வைத்து...


கோடி இன்பம் தருகிறாய் வள்ளல்போல்

ஈடேதும் கேட்காமலேயே!


தந்தையென்னை முத்தமிட்டு

திக்குமுக்காடவைக்கிறாய்!!


ஆனந்தம் பொங்கும் மனத்துடன்

அன்பை அனைவருக்கும் பரப்புகின்றாய்!!


பாகுபாடின்றி இவ்வுலகில்

பழகி களித்தாடிடவே...


அறியாமையை அமிழ்தம் போல்

அருந்திவிட்டு வந்தாயோ??!!



இது ஆரவ்க்கு வசந்தியின் ஸ்பெஷலான கவிதை.


ஏன் வசந்திக்கு ஆரவ் மேல் இத்தனைக் கொள்ளைப் பாசம் என்று கேட்கிறீர்களா?

ஆரவின் குட்டி அண்ணன் ஷ்ரவன் பிறந்தபோது கூட இப்படியெல்லாம் கவிதைகள் அவளுக்கு பிரவாகம் எடுக்கவில்லையே…


இன்னும் சொல்லப்போனால் வசந்தியின் செல்லமகள் நீரஜாவுக்கு கூட ஒரு வரி கவிதை வசந்தி எழுதவில்லையே…


இந்த கேள்விகளுக்கெல்லாம்  விடை அறிய நாம் பலவருடங்கள் வசந்தியின் வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கவேண்டும்.


ஆம்…இருபது வயதான வசந்தித் திருமணமாகி மூன்றே மாத்த்தில்  கணவருடன் வெளிநாட்டு வாழ்க்கையைத தொடங்கினாள்.வெளிநாடு வந்த புதிதல் வித்தியாசமாக  எல்லாமே புதுமையாக இருந்தது.நாளடைவில்  அடிக்கடி வெளியிடங்களுக்கு கணவருடன் போய் வந்ததில் நன்கு பழகிவிட்டது.

வசந்தி பிறந்த வீட்டில் ஒரே பெண்ணாக இருந்தவள். கல்லூரி படிப்பு முடித்ததும் பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர்.வசந்தியைவிட ஒன்பது வயது பெரியவன் சங்கர்.

நன்கு படித்து வெளிநாட்டில் வேலை செய்யும்  சங்கருடன்   திருமணம் முடிந்து விளையாட்டு போல வருடங்கள் பல வேகமாக ஓடிவிட்டன. சங்கர் பெரிய பதவியில் இருந்தாலும் பொறுமையும் குடும்ப பொறுப்பும் நிறைந்தவனாக இருந்தான். சங்கரின்  ஐந்து வயது மூத்த சகோதரி  கீதா தான்  வசந்திக்கு  ஒரே நாத்தனார்.

நாத்தனார் கீதாவிற்கு கீதாவிற்கு ஒரு  மகள் பெயர் சங்கவி. சங்கர் திருமணத்தின்போதே சங்கவிக்கு பதிமூன்று  வயதாகியிருந்தது. நாத்தனார் கீதா  வசந்தியை தன் ஒரே மகள் சங்கவியைப் போலவே மிகவும்  நேசித்தாள்.பிறந்த வீட்டில் தனியாக வளர்ந்த வசந்திக்கு கீதாவையும்  சங்கவியையும் ரொம்பவும் பிடித்திருந்தது. திருமணம் முடிந்த அடுத்த வருடமே சங்கருக்கு  நீரஜா பிறந்தாள்.

நீரஜா ஒரு வயது வரை வளர்ந்தது கீதாவிடம்தான்.ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் மாமியார் மாமனார் சென்னையில் இருந்தாலும்  பெங்களூரில் வசிக்கும்  கீதாவின் வீட்டில்தான் நீரஜா அதிகநாட்கள் தங்க வேண்டும் என்று அடம் பிடிப்பாள்.அதுபோலவே திரும்பவும் வெளிநாடு திரும்பும்போதும் ஒரே அழுகைதான் இந்த அழுகையில் சங்கவியும் சேர்ந்து கொள்வாள்.


அதனால் சங்கர்   சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஊருக்கு தன் குடும்பத்துடன்  சென்று  பெற்றோரையும் சகோதரியையும்  பார்ப்பது சங்கரின் வழக்கம். வருடங்கள் இவ்வளவு வேகமாகவா ஓடும் என்பது போல 

சங்கவி கல்லூரி முடித்தாள்.அவள் விருப்பபடியே இரண்டு வருடங்கள் வேலை பார்த்தாள்.பிறகு  சங்கவிக்கு  திருமணம்  கூட நல்லபடியாக முடிந்து முதல்  வருடமே குழந்தை ஷ்ரவனும் பிறந்தான்.


இதனால் சங்கர் குடும்பம் சங்கவி  குழந்தைக்கு  பெயர் வைக்கும் விழா.பிறகு முதல் மொட்டை காது குத்து என்று தான் வசிக்கும் நாட்டிலிருந்து குடும்பத்துடன் இரண்டு மூன்று முறை பறந்து போய்  விட்டு வந்திருந்தார்கள.

அடுத்து வந்த ஒருவருடத்தில்  மீண்டும் சங்கவி இரண்டாவது குழந்தை வயிற்றில் ஆறுமாதம் ஆகியிருந்தது. ஏற்கனவே குழந்தை பிறக்கும் அந்த தேதிக்கு டிக்கட் எல்லாம் ஊருக்குப் போக முன்கூட்டியே புக் செய்தபோதுதான் கொரோனா தொற்று ஆரம்பித்தது.கூடவே வந்த லாக்டவுனால் எங்கும் போகாமல் அனைவருமே அவரவர் வாழுமிடத்தில் வீட்டிற்குள்ளேயே  முடங்க  வேண்டிய நிலை.

அதனால், இரண்டாவது குழந்தை ஆரவ் பிறந்தபோது நேரில் போய்பார்க்கவில்லையே என்ற தவிப்பு இவர்களுக்கு அதிகமாக இருந்தது.குழந்தையை வீடியோகாலில் பார்த்தாலும் மனம் ஏங்கி தவித்தது.அதனால் தனக்குத் தெரிந்த வித்த்தில் கவிதை எழுதி ஆரவ்வை வரவேற்றாள் வசந்தி.அதனால் இந்தக் கவிதையை மிகப் பத்திரமாக வைத்திருக்கிறாள் சங்கவி.


பள்ளியில் படித்து வந்த வசந்தியின் மகள் நீரஜா  ஆன் லைன் வகுப்பில் இருந்தாள்.

வீட்டிலேயே இருந்த நீரஜாவுக்கு  போர் அடித்தது.ஆன் லைனில் அதிக நேரம் செலவழித்தாள். முகம் தெரியாத புதிய நட்புகள் அவளுக்குக் கிடைத்திருந்தன.வசந்தி இதைப் பற்றி  கவலையுடன் தன் கணவனிடம் பேசினாள். ஊரிலிருக்கும் தன் நாத்தனார் கீதாவிடமும்  சொன்னாள் வசந்தி.


ஆரம்பத்தில் கொரோனா இப்போது சரியாகிவிடும்  இப்போது சரியாகஇவிடும் என்ற எதிர்பார்ப்பிலேயே  நாட்கள் மாதங்களாகின.

ஆரவ்வின்  முதல் பிறந்த நாள் கூட வீடியோகாலில் தான் இவர்களால் பார்க்க முடிந்தது.


அதேசமயம் நீரஜா  எப்போதும் ஆன்லைனில் இருப்பதையும் அவள் கவனமாக  இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் நாத்தனார் மகள் சங்கவியிடம் நீரஜா அறியாதபடி அடிக்கடி வசந்தி சொல்லிக்கொண்டே இருந்தாள்.


அதனால்,


“ நீருமா செல்லம்,  இதுவரைக்கும் உங்கூட   ஸ்கூல்ல  படித்திராத, முன்னபின்ன  தெரியாத  புதியவர்களுடன் பழகுவது தவறு. ஆன்லைனில்  மட்டும் தானே நீ பழகுற?அதனால  அவர்களைப் பற்றி முழுக்க நமக்குத்  தெரியாது. ஆன்லைன்ல நிறைய பூச்சாண்டிகள் இருக்காங்க. உங்கூட பேசறவங்க உன்னைவிட  பெரியவங்களாக கூட இருக்கலாம்டா  செல்லம்.சின்ன பொண்ணுமாதிரி போட்டோலாம் போட்டு ஏமாத்துவாங்க. ஆனால் அவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா? ரொம்ப  இனிமையாகப் பேசுவாங்க.

தனியா விட்டுட்டு அப்பா அம்மா வெளில போயிருக்கும் போது  நம்பள ஏமாத்தி   வீட்டை விட்டு வெளில வரவைப்பாங்க. இல்லனா நம்ப வீட்டுக்கே வந்து வா  சாக்லேட் , ஐஸ் க்ரீம் குடுப்பாங்க பிடிச்சதெல்லாம் சாப்பிட குடுப்பாங்க.  ஆனால்,அதுல மயக்க மருந்து கலந்திருக்கும். அத வாங்கி சாப்பட்டதும் நாம மயங்கி போய்டுவோம்.அவ்ளோதான் நம்பள கோணிப்பைல போட்டு கடத்திட்டு  போய்டுவாங்கம்மா.” என்று இப்படியே தொடர்ந்து பல முறை  தான் கேள்விப்படும் செய்திகளையும் சேர்ர்த்து  ஆன்லைனில் ஏற்படும்  ஆபத்துகளைப் பற்றி நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் குழந்தைகளுக்கும்  புரியும்படி அடிக்கடி   பேச ஆரம்பித்திருந்தாள் சங்கவி.


இதனால், இப்போதெல்லாம் நீரஜா  ஆன்லைனில் அதிகநேரம் இருப்பதல்லை.நேரத்திற்கு தூங்க ஆரம்பித்தார்கள்.

சங்கரும் வசந்தியும்   தினமும் உறவினர்கள் யாருடனாவது  போனில் பேசிக கொண்டுதான் இருந்தார்கள்.பலப்பல வைத்தியங்கள் பகிரப்பட்டன்.கவலையும் பீதியுமான வாழ்க்கையால்  வீட்டுக்குள்ளேயே அனைவரும் முடங்கியே இருந்தனர்.


தடுப்பூசி போட்டிருந்தாலும் யாருக்கும் எங்கும் போக தைரியம் இல்லை.இவர்கள் வருவதாக சொன்னாலும் வேண்டாம் அங்கேயே பத்திரமாக இருங்கள் என்ற அறிவுரையே உறவினர்களிடமிருந்து வந்தது.



ஒரு வழியாக கொரோனா அலை முற்றிலும் ஓய்ந்தது.

பள்ளிகள் திறந்ததும் ஒன்பதாம் வகுப்பிலிருந்த நீரஜா நிறைய படிக்க வேண்டி வந்ததால் ஊருக்கு செல்வது குறைந்தது.

ஆரவ் கூட ப்ரீ கேஜி சேர்ந்துவிட்டான்.

இருந்தாலும் ஆன்லைன் பூச்சாண்டிகளின்  கதைகள் நீரஜாவுக்கும்  சங்கவியின் குழந்தைகளுக்கும் சொல்லப்படுவது நிற்கவில்லை.


இந்நிலையில்தான் முதன் முதலாக நாத்தனார் மகள் சங்கவி  தன் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு வருவதாக சொன்னாள்.அந்த நாள் நாளைக் காலை தான் என்பதால்  அவர்களுக்காகத் தான்  வசந்தி வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.ஆரவ்வை நேரில் பார்க்கப்போகிறோம் என்ற குதூகலம் அவர்கள் மூவருக்குமே இருந்தது.


மறுநாள் ,இவர்கள் ஏர்போர்ட்டுக்குப் போய் சங்கவியின் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

சுருட்டை முடியும் பெரிய குண்டு கண்களுமாய்  ஆரவ்  இவர்களை முதன்முதலில் நேரில் பார்ரத்தவுடன்  அவன் முகத்தில் தோன்றிய சிரிப்பும் சந்தோஷமும் வசந்தியை  திக்குமுக்காட வைத்தது.பாசத்தின் வலிமை இதுதான் என்று சங்கர் பெருமையாக நினைத்தான்.ஆரவ் வசந்தியின் மடியில் உரிமையாய் வந்து கொண்டான்.


அந்த வீட்டில்  குழந்தைகளின் சந்தோஷத் துள்ளல்களால் சிரிப்பொலி நிரம்பியிஇருந்தது.அன்று ஒரு நாள் சற்று ஓய்வாக இருந்துவிட்டு மறுநாள் காலையிலேயே குழந்தைகளுடன் பக்கத்தில் இருந்த ஜுராங் லேக் கார்டன்ஸிற்கு போய் ரொம்ப நேரம் விளையாடிவிட்டு  வந்ததால் அனைவருமே டயர்டாக இருந்தார்கள்.கொரோனாவால் பிரிந்திருந்த உறவுகளின் பாசம் அந்த சமயம் அவர்களை பலமாக இணைத்துக் கொண்டிருந்தது. ஆரவ் இவர்களிடம்  பலவருடம் பழகியவன் போல் இயல்பாக இருந்தது வசந்திக்கு சந்தோஷமாக இருந்தது.

அடுத்தநாள் காலை சமையலறையில் பிஸியாக இருந்த சங்கவிக்கு போன் வந்தது.

அவளுடைய கல்லூரித் தோழி பேசினாள். இன்று காலை விமானத்தில் சென்னையிலிருந்து பிறப்பட்டு  சிங்கப்பூர் வருகிறாள். மறுநாள் அதிகாலை சிங்கப்பூர் வழியாக ஜப்பான் போகிறாளாம். 

சிங்கப்பூரில் 12 மணிநேரம் இருப்பாளாம்.அதனால் இந்தக் காத்திருப்பு நேரத்தில் அவளைப் போய் பார்த்துவிட்டு வர ஆசைப்பட்டாள் சங்கவி.

ஆரவும் ஷ்ரவனும்  அத்தை   வீட்டிலேயே இருப்பதாக சொன்னதால் .

மதிய உணவை முடித்துவிட்டு சங்கவியும்  மருமகனும் மட்டும் ஏர்போர்ட்டிற்கு கிளம்பினார்கள்.


அவர்கள் சென்றதும்   வீட்டில் சமையலறையில் வசந்தி  பிசியாக இருந்தபோது ஹாலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“மாமி  ,சமையல் பண்றீங்களா என்ன சமையல்?” பெரிய மனிதன் போல கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் ஆரவ்.

என் சங்கவி  வசந்தியை மாமி  என்று அழைப்பதால்  இந்த குழந்தைகளும் அப்படியே அழைக்கின்றன.

“ஆரவ்  செல்லத்துக்கு  பிடிச்ச பருப்பு சாதம் பண்றேன்.” என்றாள் வசந்தி.

அதற்குள் பெரியவன் ஷ்ரவன் உள்ளே வந்தான்.

“எனக்கு பிடித்த செட் தோசை வடகறி பண்ண முடியுமா “ என்றான்.

வசந்திக்கு  தூக்கி வாரிப்போட்டது.வடகறி செய்திருக்கிறாள்  ஆனால் 

 இதுவரை  செட்தோசை செய்ததில்லை.

“ சாரி செல்லம்  “ என்ற  ஷ்ரவனை மன்னிப்புக் கேட்கும் பாவனையில்  பார்த்தாள் வசந்தி 

அவனுக்கும் இவளைப் பார்த்து பாவமாக இருந்தது.

“மாமி,பரவாயில்ல.எனக்கு இட்லிக்கு ரசம் தொட்டு சாப்பிட ரொம்ப பிடிக்கும் அது செய்ய முடியுமா”என்று கொஞ்சம் இரங்கி வந்தான் ஷ்ரவன்.

“அதுக்கென்னடா தங்கம் பண்ணிட்டா போச்சு” என்று வசந்தி  உற்சாகமாக சொன்னதும் குழந்தைகள் சந்தோஷமாக மீண்டும் டீவி பார்க்க ஹாலுக்கு ஓடினார்கள்.


அவர்கள் எல்லோரும் அன்று டீவி பார்தது பொழுதைக் கழித்தார்கள். எட்டு மணிக்கு இரவு உணவை முடித்த போது 

ஆரவ் கேட்டான்.

“அம்மா எப்போ வருவாங்க”

“இப்போ மணி எட்டு இன்னும் டூ அவர்ஸ்ல வந்திடுவா” என்று 

வசந்தி  சொல்லிவிட்டு பாத்திரங்களை டிஷ்வாஷரில் போடுவதற்கு சமையலறைக்குப் போனாள்.

குழந்தைகளுடன் நீரஜாவைம் சங்கரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சற்று நேரம் கழித்து மீண்டும் சமையலறைக்கு வந்த ஆரவ் 

“மாமி ,  டூ அவர்ஸ் முடிஞ்சிதா” என்றான்.

“இல்ல தங்கம்,இன்னும் முடியல” என்று சிரித்துக்கொண்டே வசந்தி சொன்னதும்

“ஓகே” என்று சொல்லி ஹாலுக்கு ஓடினான் ஆரவ்..


வசந்தி  சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். 

மீண்டும் அங்கே வந்த ஆரவ்

“அத்தை  இப்போ டூ அவர்ஸ் ஆகிவிட்டதா” என்றான்.

“இன்னும் இல்லமா “ இப்படி வசந்தி சொன்னதும் ஆரவ் ஓடிவிட்டான்.

வசந்தி  சிரித்துக் கொண்டே பாத்ருமை அலம்பிவிட்டு வெளியே வந்தாள்.

ஆரவ் மறுபடியும் ஓடிவந்து 

“மாமி  இப்போ முடிஞ்சிதா?” என்றவனை ஹாலுக்கு அழைத்து வந்த வசந்தி 

கடிகாரத்தை காட்டி சின்ன முள் பெரிய முள் இப்படி வந்தாதான் டூ அவர்ஸ் முடியும்  என்று விளக்கி சொன்னாள் வசந்தி.

அவன் திருப்தியாக தலையாட்டினான்.

பிறகு எல்லா வேலைகளும் முடிந்து தட்டில்  பால் கோப்பைகளை  எடுத்துப்போய் குழந்தைகளிடம் கொடுத்த போதும் அவன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தான் .

வசந்தி  பெட்ரூமிற்கு போய் குழந்தைகளுக்கான படுக்கையை தயார் செய்துவிட்டு நைட்லாம்ப் ஆன் செய்தபோது அங்கு வந்த ஆரவ் கண்களில் கண்ணீர் பெருக ஆரம்பித்தது.

“மாமி,  டூ அவர்ஸ் முடிஞ்சிடுத்து ஆனா அம்மா இன்னும் வரலயே”

என்று சொல்லிவிட்டு முதலில்  மெதுவாக கேவ ஆரம்பித்தவன் பிறகு பெரிய குரிலில் அழ ஆரம்பித்தான்.

“அழாதே செல்லம்.வா டீவி பாக்கலாம்.இப்போ வந்திடுவா அம்மா” அவனை நம்ப வைக்க வாசல் கதவை கூட திறந்த வைத்தான் சங்கர்.

அவர்கள்  சொல்லும் துளியும் வார்த்தைகளை நம்பாமல் 

“டூ அவர்ஸ் முடிஞ்சிடுத்து நீங்க பொய் சொல்றீங்க.என்னை ஏமாத்தறீங்க.அம்மா இப்பவே வேணும் “ என்று ஓவென்று  தரையில் புரண்டு அவன் அழுதபோது ஷ்ரவனும் பயந்துபோனான். அவன் முகமும் வாடிப் போய்விட்டது. ஆனாலும் வசந்திக்கு உதவ அவன் ஆரவ்வை கட்டியணைத்துக் கொண்டான்.அப்போதும் ,ஆரவ் அழுகையை துளியும் நிறுத்தவே இல்லை.முகம் சிவக்க அந்த அபார்ட்மென்ட் அதிர கத்தி கதறினான் ஆரவ்.


அவர்களுக்கு  அவனை எப்படி சமாளிப்பது என்று ஒன்றுமே புரியவில்லை.நீரஜா   விளையாட்டு காட்டி சிரிக்க வைக்க பார்த்தாள்.. நேரம் ஆக ஆக அவன் அழுகை அதிகமானது. ஆரவ்வின்  உடம்பு  சில்லென்று ஆகிவிட்டது.வேறு வழியில்லாமல் சங்கவிக்கு  போன் செய்தான் சங்கர்.. அவளும் கணவருடன் டாக்சியில் வேகமாக வந்து சேர்ந்தாள்.அம்மாவைப் பார்த்ததும் ஆரவ்வின் அழுகை சற்று குறைந்தாலும் ரொம்ப நேரம் கேவிக் கொண்டே இருந்தான்.சங்கவி ஆரவ்வை இறுக அணைத்துக் கொண்டாள்.எல்லோரும் ஆரவ்வை சுற்றியே கவலையுடன் உட்கார்ந்திருந்தார்கள்.

காலைல அழகாக  விளையாடிக் கொண்டு  இருந்த குழந்தை  ரொம்ப நேரம் அழத்து எல்லோருக்குமே ரொம்ப வருத்தமாக போய்விட்டது.


அப்போது சட்டென்று  ஞாபகம் வர ஆரவ்க்காக வாங்கி வைத்திருந்த   சாக்லேட்டை எடுத்து வந்து அவனிடம்  நீட்டினான் சங்கர்.

“வேண்டாம் மாமா. .அம்மாவோட பையில நிறைய சாக்லேட் இருக்கு” என்று கேவிக் கொண்டே சொல்லிவிட்டான் ஆரவ்.  சங்கரிடமிருந்து சாக்லேட்டை அவன் வாங்கவே இல்லை.

இருந்தாலும் அவனுக்கு சாக்லேட் வேண்டும் என்று ஆசையாக இருக்கவே தான்  சொன்னதை  நிரூபிப்பவன் போல உடனே  தன் அம்மா சங்கவியின்  கைப்பையில்  சாக்லேட் எதாவது இருக்கிறதா என்று தேடினான்.ஆனால்,அங்கே   சாக்லேட்டே இல்லை.

உடனே “அம்மா மாமகிட்டேந்து    சாக்லேட்ட வாங்கி உன் பையில வச்சிட்டு  அப்புறமா எடுத்து எனக்குக் குடுமா” ஆரவ் கேவிக்கொண்டே இப்படிச் சொன்னதும்,


முன்பின் நேரிலேயே பார்த்திராமல் ஆன்லைனில்  மட்டுமே பேசி அறிமுகமாகிய சங்கரின்  குடும்பம் தான்   

“ஆன்லைன் பூச்சாண்டிகள்” என்று   நினைத்து பயந்துதான் கதறி அழுதிருக்கிறான் ஆரவ். அதனால்தான் மயக்கமருந்து கலந்த சாக்லேட் என்று வாங்க மறுத்திருக்கிறான் என்ற உண்மையை  உணர்ந்ததும் அவனுக்காக ஆசை ஆசையாய் கவிதை எழுதிய வசந்தியும் அதனை சேமித்து வைத்த சங்கவியிம் திகைத்துப் போனார்கள்.




Friday, February 13, 2026

மை டியர் கரப்பான் பூச்சிகளே….

மை டியர் கரப்பான் பூச்சிகளே….


ல்லிதாவும் ஷங்கரும் கணவன் மனைவியர்.அவர்களுக்கு ஒரே மகள் நீரஜா.நீரஜா பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள்.அவள் டாட்’ஸ் லிட்டில் பிரின்ஸஸ்.

ஒரே மகள் ஆங்கிலத்தில் வகுப்பில் அவள்தான் முதல் மார்க்.மற்ற சப்ஜெக்ட்களில்  75 to 85% தவறாமல் வாங்கிவிடுவாள் .ஆனால் நீரஜா வீட்டில் ஒரு வேலையும் செய்வதில்லை.

முடிந்தபோதெல்லாம். சங்கர் தன் மனைவிக்கு உதவி செய்வான்.

ஆனால் ஷங்கர் மாத்த்தில் ஒரு பத்து நாள் வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு பயணிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

அதுமட்டுமல்ல கிராமத்தில் விவசாயம் செய்யும் தன்னுடைய தாய் தந்தையரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை போய் பார்த்து அவர்களுடனும் ஒரு வாரம் தங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்வான்.

நீரஜா ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை காலாண்டு அரையாண்டு தேர்வு விடுமுறைகளில் குடும்பத்தோடு கிராமத்திற்கு செல்வது சங்கரின் வழக்கம்.ஆனால் நீரஜா பத்தாம் வகுப்பில் சேர்ந்த இந்த மூன்று ஆண்டுகளாக விடுமறைகள் குறைந்து விட்டதால் லலிதாவும் நீரஜாவும் எங்குமே போவதில்லை.

அதனால் சங்கர் மட்டுமே கிராமத்துக்குப்  போவதாக அமைந்திருக்கிறது.

சங்கர் ல்லிதாவுக்கு வசதியாக வாஷிங் மெஷின் டிஷ்வாஷர் என்று அனைத்தும் வாங்கியிருந்தான்.


ஆனால், ல்லிதா நாற்பதை தாண்டியதிலிருந்தே முன்பு போல இல்லாமல்  அடிக்கடி உடம்பு முடியவில்லை என்று

கை வலி முதுகு வலி கழுத்து வலி தலைவலி என்று அவள் வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொண்டு அவ்வப்போது ஓய்வெடுக்கிறாள்.

சங்கருக்கு எரிச்சலாக வருகிறது.ஏன் இவள் சோம்பேறியாகிவிட்டாள்.

நான் அலுவலக வேலையாகவும் தன் பெற்றோருக்காகவும் வெளியில் அலைகிறேன்.இவளோ வீட்டிலேயே ரிலாக்ஸ்ட் ஆக இருந்துகொண்டு இப்படி அடிக்கடி படுத்து விடுகிறாளே.

வீட்டில் வசதியும் நல்ல வாழ்க்கையும் சந்தர்ப்பமும் அமைந்ததால் அவளுக்கு சோம்பேறித்தனம் தான் வந்திருக்கிறது ஆனால் என் அம்மாவோ இன்றும் வயல் வெளியில் வேலை செய்துகொண்டு சுறுசுறுப்பாக இருக்கிறார்.நமக்கு வாய்தது ஒரு சோம்பேறி என்று நினைத்தான்.


நாளுக்கு நாள் மனைவியின் நடத்தை அவனுக்குள் வெறுப்பை ஏற்படுத்தியது.தன் மனைவியின் வயதில் இருக்கும் பெண்கள் காய்கறிக் கடைகளிலோ, அலுவலகங்களிலோ வேலை செய்வதைப் பார்த்தால் இவர்களும் பெண்கள்தானே இவர்கள் சுறுசுறுப்பாகத் தானே இருக்கிறார்கள்.

ஒரே ஒரு பெண் குழந்தையை வளர்ப்பது பெரிய வேலையா என்ன.

 அதுவும் வளர்ந்த பெண்குழந்தையை அவள் பள்ளிக்கு சென்றதும் வீட்டை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று குப்பையே இல்லாத வீட்டை தினமும் பெருக்குவதும் தரை துடைப்பதும்.  ஏற்கனவே சுத்தமாக இருக்கும் கழிவறையை கழுவுவதும் வாரம் ஒரு முறை இல்லாத  ஒட்டடையை தேடித் தேடி அடிப்பதும் இப்படி தேவையில்லாத வேலைகளைத் தாமே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்துவிட்டு கழுத்து வலி இடுப்பு வலி என்று படுப்பது என்று ல்லிதாவை நினைத்ததும் அவனுக்குள் வெறுப்பை ஏற்படுத்தியது.

இதில் வீட்டில்  அதிகாரம் வேறு செய்து கொண்டே இருப்பது என்னமோ இவள்தான் குடும்பத்தை நிமிர்ததுகிற மாதிரி…


ஆனால் ல்லிதாவின்  காலை 5 மணிக்கே ஆரம்பம்.

“டம்ளரை அப்படியே வைக்காதே…”

“சாப்பிட்ட ப்ளேட்டை சிங்கில் போடு…”

“கிச்சன் மேசை துடை…”

இந்த மூன்று வசனங்களை ல்லிதா  சொல்லிக் கொண்டே ருப்பாள்.


ஆனால் வீட்டின் மற்ற குடியரசுத் தலைவர்களான — கணவர், மகள் — ஒரே முடிவில் இருந்தார்கள்:

“அம்மா வீட்டில்  ரொம்ப ஓவரா பண்ணுறாங்க!” என்று இருவரும் பேசிக் கொள்வார்கள.

ல்லிதா முடியவில்லை என்று படுத்தால்

“உன்னை யாரு இப்போ பெருக்கச் சொன்னது?ஒட்டடை அடிக்கச சொன்னது” என்று கத்த ஆரம்பித்தான் சங்கர்.


ஆனாலும்,ல்லிதாவைப் பொறுத்தவரை  தூய்மை என்பது ஒரு வேலை இல்லை — அது அவளின் உயிர்.”


கணவனுக்கும்  மகளுக்கும் ல்லிதாவுடன் ஒரு பகை மனப்பான்மை உருவாகியிருந்தது தெரியும். ஆனால்  பெரிதுபடுத்துவது இல்லை.


ஒருநாள் சங்கர் ஊரில் இல்லாத சமயம் மாலை, பக்கத்திலிருந்த மார்கெட்டில் காய்கறி வாங்கிவிட்டு  வீடு திரும்பிக் கொண்டிருந்த ல்லிதாவை  ஒரு ஆட்டோ வலது தோள்பட்டையில் மோதி விட்டது.

விஷயம் தெரிந்து முக்கியமான அந்த மீட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு ஓடிவந்த சங்கர்

“உன்னை யார் காய்கறி வாங்கச் போகச் சொன்னது? எதையாவது பண்ணிட்டு உயிரை வாங்க வேண்டியது” என்று எப்போதும் போல் பேசினான்.ல்லிதா கைவலியை விட  மனதில் விழுந்த அடி தாங்க முடியாமல் பொங்கிய கண்ணீரைக் கட்டு்படுத்தினாள்.


ஆபரேஷன் முடிந்து  மூன்று மாதம் முழு ஓய்வு தேவை என்று டாக்டர்கள் சொன்னதும் ப்லஸ்டூ படிக்கும் மகளுக்கு தொந்தரவாகிவிட்டதே என்று கலங்கினாள்.

இங்கே ஓய்வெடுக்க முடியாது யாரையாவது  உதவிக்கு அழைத்து வந்தால் நீரஜா படிக்க தொந்தரவாக இருக்கும்.அதனால்  ல்லிதா தன் தாய் வீட்டிற்கு கிளம்ப வேண்டிய சூழ்நிலை.

“நீரஜா  ஸ்கூல்  போகணும்.நான் இல்லாம உங்களால எப்படி சமாளிக்க முடியும …?” என்று ல்லிதா கவலையில் சொன்னபோது 


“அடடா! நீ போய் ஓய்வு எடு. நாங்கள் எல்லாம் பார்த்துக்கறோம்!” — என்று அப்பாவும் மகளும் ஒரே குரலில்

அலட்சியமாக சொல்லி அவளை அனுப்பிவைத்தார்கள்.உடல் வலியும் மன வலியுமாய் வெளியேறினாள் ல்லிதா. ஆனால், அப்பாவிற்கும் மகளுக்கும்  நிம்மதி. ல்லிதா இல்லாத சுதந்திரம் பிடித்திருந்தது.

இத்தனை வசதிகள் நிறைந்த வீட்டில் குடும்பத்தை நடத்துவது சாதாரணமான விஷயம் தான் என்று ல்லிதாவுக்கு நிரூபித்து விடவேண்டும் என்ற எண்ணம் சங்கருக்கு இருந்தது.


ல்லிதா தன் பிறந்த வீட்டுக்கு சென்ற முதல் நாளே சங்கர் அலுவலகத்தில் தன் வீட்டின் நிலையை சொல்லி மூன்று மாதங்களுக்கு வெளியூர் பிரயாணங்கள் செய்ய முடியாது என்று சொன்னதும் அவனது டிராவலிங் அலவன்ஸ் கட் ஆனது.


இங்கே கிச்சனில் கப் இருந்த இடத்தில் பிளேட்.

பிளேட் இருந்த இடத்தில் ஸ்பூன்.


“சிங்கில் போடு” என்று யாரும் அங்கு கத்தவில்லை.

நினைத்தபோது பாத்திரம் அலம்பலாம் அது சுதந்திரத்தின் பொற்காலம்.

சிங்கில் இருந்த பாத்திரங்கள் “இப்போ என்ன அவசரம் நாளை பார்க்கலாம்” என்ற சங்கரின் நம்பிக்கையால்  நாள்கணக்கில் கிடந்தன.

இப்படி ரிலாக்ஸ்ட் ஆக வாழாம என்னமோ ஓயாம வேல செய்யற மாதிரி வலி வலினு சொல்லிட்டு  பார்த்தாலும் உயிரை வாங்க வேண்டியது என்று வெறுப்பாக நினைத்தான் சங்கர்.


ஹோட்டல் சாப்பாடு வந்தது.

டிவி முன்னால் அமர்ந்து இருவரும் சந்தோஷமாக சாப்பிட்டார்கள்.நான்கு நாட்களுக்கு ஒரு முறை இரவில் வாஷிங் மெஷினில் துணியை துவைத்தார்கள்.அதுவரை கூடையில் அழுக்குத்துணிக் குவியல் இருந்தது.

அம்மாவின் கத்தலை விட அலசாத சாக்ஸே மேல் என்று உதறி உதறி சாக்ஸை எடுத்து அதில் பாடி ஸ்ப்ரே அடித்து அணிந்து கொண்டு பள்ளிக்கு போனாள் நீரஜா.

நாட்கள் மாதங்களாகி ஓடின.

இவ இல்லனா சமாளிக்கவே முடியாதா என்ற எண்ணத்தில் ஒரு மாதம் அந்த வீடு அமைதியாக அவர்களைப் பொறுத்தவரை மிக மிக  சந்தோஷமாக போயிற்று.

இன்னும் ஆறுமாதம் கழித்து கூட அவள் வரட்டும் என்று நினைத்தான் சங்கர்.


முதல் மாதம்  முடிந்ததும் ஒரே  ஒரு கரப்பான் வந்தது.


“பரவாயில்லை… ஒண்ணுதானே  …” என்றார்கள் சிரித்தபடியே


அடுத்தநாள்  அவர்கள் அறியாமல் இரண்டு கரப்பான்கள் வந்தன.

  அந்த “இருவரும்” குடும்பம் ஆரம்பித்திருந்தார்கள்.


இரண்டாவது மாதம்  முடிந்ததுமே அங்கங்கே 

தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, அத்தை, சித்தப்பா, கொள்ளுப்பேரன்…என்று கரப்பான்கள்  சேர்ந்து அங்கே பெரிய கூட்டுக் குடும்பம் அமைத்து விட்டதை அவர்கள் அறியவில்லை.


ஒரு  நாள் காலை, மகள் டம்ளரில் தண்ணீர் ஊற்றி குடிக்கப் போனாள்.

அதில் நான்கு கரப்பான் குட்டிகள் நீச்சல் போட்டுக் கொண்டிருந்தன.


“அப்பாaaaaaaaa!” அவள் அலறியதில் ஓடோடி வந்த சங்கர் கரப்பான்களைப் பார்த்ததும் 

“இதுக்கா பயந்து போன.உன் அம்மா கரப்பான்பூச்சியைப் பார்த்து அலறுவா.நீ என்னைப் போல தைரியசாலினு நினைச்சேன்.நீயும் உன் அம்மா போல பயந்தாங்கொள்ளிதானா.”அலட்சியமாக சொன்ன சங்கர்.


 டவலை எடுக்க அலமாரியைத்  திறந்தால் — உள்ளே கரப்பான்களின் ஓட்டப்பந்தயம் நடந்தது.சாயங்காலம் வந்து இதுக்கு ஒரு வழி பண்றேன் என்று நினைத்துக் கொண்டான்.


பிறகு தன் மேசை ட்ராயர் திறந்தால் — அங்கேயும்  கரப்பான் முட்டைகள் இருந்தன. 


அப்போது தான் சங்கருக்குள் ஒரு உணர்வு ல்லிதா  போனதும்  வீடு கரப்பான்களின்  சொத்து ஆகிவிட்டதா 

இவ்வளவு கரப்பான்களை எப்படி விரட்டுவது என்று கவலையாக இருந்தது சங்கருக்கு.


மாலை ஆபிஸிலிருந்து வரும்போது சங்கர்  பேகான் ஸ்ப்ரே வாங்கினான்.


கிச்சனில் ஸ்ப்ரே அடித்ததும் 

அனைத்து கரப்பான்களும்

“பிளான் B!” என்று ஒரே ஓட்டமாக  பெட்ரூமுக்குள்  ஊர்ந்தன.


அங்கும் ஸ்ப்ரேஅடித்தால் அவை ஹாலுக்கு எஸ்கேப்.


இது ஒரு இடமாற்றப் போர்.இப்படி போராடியே பத்து நாட்கள் ஓடிவிட்டன.ஆனால் கரப்பான் பூச்சிகள் பகலிலும் நடமாடிக் கொண்டுதானிருந்தன.


நீரஜா குகுள் செய்து பார்த்தாள்.



கரப்பான் பூச்சி மூன்று முக்கிய கட்டங்களை கடந்து வளர்கிறது:


1️⃣ முட்டை (Egg Stage)

பெண் கரப்பான் ஓதேகா (Ootheca) என்று அழைக்கப்படும் ஒரு சிறிய முட்டைப்பை உருவாக்கும்.

இந்தப் பை பழுப்பு நிறத்தில் இருக்கும்.ஒவ்வொரு ஓதேகாவிலும் சுமார் 16–40 முட்டைகள் இருக்கும் 

சில நாட்களில் (அல்லது 1–2 வாரங்களில்) அவை வெளிவரும்.

     அதனால் தான் ஒரே நேரத்தில் பல குட்டிகள் தோன்றுகின்றன.


2️⃣ நிஃப் (Nymph Stage – குட்டி)

முட்டையிலிருந்து வெளிவரும் குட்டி கரப்பான் “நிஃப்” என்று அழைக்கப்படும்.

இவை சிறியதாகவும், இறக்கைகள் இல்லாததாகவும் இருக்கும்.

பெரிய கரப்பான் போலவே தோற்றம் இருக்கும், ஆனால் அளவில் சிறியது.


🔁 இவை 5–7 முறை தோலை மாற்றி (molting) வளர்கின்றன.

ஒவ்வொரு முறை தோல் மாறும்போது — அளவு அதிகரிக்கும்.


⏳ இந்த வளர்ச்சி சுமார் 2–6 மாதங்கள் ஆகும் (சூழ்நிலை, வெப்பம், உணவு ஆகியவற்றைப் பொறுத்து).



3️⃣ முழு வளர்ச்சி (Adult Stage)

இறுதியாக இறக்கைகள் வளர்ந்து, இனப்பெருக்கத்திற்குத் தயாராகும்.

ஒரு பெண் கரப்பான் தனது வாழ்க்கையில் 20–30 ஓதேகா வரை உருவாக்கலாம்!


⚠️ அதாவது —

ஒரு கரப்பான் → நூற்றுக்கணக்கான புதிய கரப்பான்களை உருவாக்கும்.


இதைப் படித்ததும் அப்பாவிற்கும் மகளுக்கும் அன்று இரவு ஹோட்டல் சாப்பாடு கூட சாப்பிட மனம் வரவில்லை.


மகள் மெதுவாக சொன்னாள்:

“பாவம் அம்மா தினமும் இதுக்காகத் தான் இவ்வளவு வேலை பண்ணுவாங்கலா?”

“நாம… கொஞ்சம் உதவியிருக்கலாமே…”என்றாள்.


சங்கர்  அமைதியாக இருந்தான்.


அடுத்த இரண்டு வாரங்களும் அலுலகத்திலிருந்து சீக்கிரமே வந்து வீட்டை இரண்டு முறை பெருக்கி சுத்தம் செய்தும் கரப்பான்களுடன் போராட முடியாமல் தோல்வி அடைந்தான். உடல் வலி கண்டது  தான் மிச்சம். உடம்பு வலி தாங்காமல்  டாக்டரிடம் போய் வந்தான் சங்கர். கடைசியில் பெஸ்ட் கன்ட்ரோல் வந்துதான் ப்ரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடிந்தது. கரப்பான் குடும்பம் அவசர கூட்டம் வைத்து —

“இந்த வீடு இனிமேல் நமக்கு பாதுகாப்பில்லை” என்று தீர்மானித்து ஓட்டம் பிடித்தன.


அடுத்த நாளிலிருந்து வீடு முழுவதும்  சுத்தம்.

அப்பாவும் மகளும் சிங்க்கை ஈரமில்லாமல் பார்த்துக் கொண்டனர்.மேசை அடிக்கடி துடைக்கப்பட்டது.

குப்பைகள் உடனடியாக வெளியே போக ஆரம்பித்தன.


அன்று மாலை மகள் பள்ளியிலிருந்து சோகமாக வீட்டிற்கு வந்தாள்.

இரவு அப்பா விசாரித்தார்.

“அப்பா, கிருஷ்க்கு அன்கண்டிஷனில் ஆஃபரில் அமெரிக்கால ஒரு யூனிவர்சிடில சீட் கிடைத்துவிட்டது. ஆனா,எனக்குக் கிடைக்கல.

நான் தான் அவனுக்கு இங்கிலீஷ்ல எஸ்ஸே எழுத ஹெல்ப் பண்ணேன்.ஆனா அவன் எனக்கு இதுவரை எந்த உதவியும் பண்ணல.இப்போ மறுபடியும் இன்னொரு யூனிவர்சிடிக்கு அப்லை பண்ண எஸ்ஸே எழுதித் தரமுடியுமானு கேக்கறான்.டூ மச்னு சொல்லிட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன்.நானும் முயற்சி பண்றேன் எனக்கு கிடைக்கலயேப்பா.ஆனா அவன் என்னை யூஸ் பண்ணி முன்னுக்கு வந்துட்டான்.இப்போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்குப்பா.” ஓவென்று அழுதாள் மகள்.

நீரஜா புத்திசாலிதான் அவள் ஆங்கிலத்தில் மட்டும் தான் வகுப்பில் நம்பர் ஒன்.மத்த சப்ஜெக்ட்ல 75 to 85 range தான்.ஆனால் கிருஷ் கணிதம் சயன்ஸ் எல்லா்துலயும்  கில்லாடி. எப்பவுமே above 90  தான்.

அதனால பிரிடிக்டிவ் ஸ்கோர்லயே அவனுக்கு அன்கன்டிஷனல் ஆஃபர் கிடைச்சது நியாயம்தான்.

ஆனால்,நீரஜா கிருஷ் ரெண்டு பேருமே நல்ல ஃப்ரெண்ட்ஸ். இப்போ நீரஜா ஜெலஸியால கிருஷ்ஷோட எஃபோர்ட்ஸ கவனிக்கல.இப்படி  நினைக்கும் போதே சங்கருக்குப் புரிந்தது.


 நான் கூட ல்லிதாவ இப்படித்தானே நினைக்கிறேன். வெளில அலையற என்னோட ஒர்க் கஷ்டம்தான். கிராமத்துல வேல செய்யற எங்கம்மாவோட உழைப்பும் ரொம்ப கஷ்டம்தான்.வேலைக்குப் போகிற எல்லாப் பெண்களுக்கும் கஷ்டம் தான்.அதே சமயம்  டவுன்ல வீட்டுல சகல வசதிகளோட இருந்தாலும் 

என்னைப்போல அடிக்கடி பிரயாணம் செய்யும் கணவனையும்  நீரஜா மாதிரியான  குழந்தைய்யும்  சமாளிச்சி வீட்டில் இந்த பூச்சிகள் வந்துடக்கூடாதேனு  போராடி  ஒவ்வொரு நாளும் வலி நிவாரணிகளோட வாழற என் மனைவியோட  உழைப்பும் சமமான கஷ்டம் தான் .இது புரியாம நானும் அவளை குறைச்சி தானே மதிப்பிடறேன்.என் மகள் என்னைப் போலவே தானே இருக்கிறாள்.இவளுக்கு நான் எப்படி அறிவுரை சொல்லமுடியும்? அமைதியாக இருந்த சங்கர்.மகளை நிதானமாகப் பார்த்தான்.

ல்லிதாவை பற்றி நினைத்ததும் அவனுடைய கண்கள் கலங்கியிருந்தன.நீரஜாவிற்கு எதுவும் புரியவில்லை.

அப்பா தன் நிலையை நினைத்து தனக்காக கணகலங்குவதாக நினைத்தாள்.

“அப்பா,கூலாக விடுங்கப்பா.எனக்கும் நல்ல யூனிவர்சிடி கிடைக்கும் “ என்று ஆறுதல் சொன்னாள்.


மூன்று மாதம் முடிவதற்கு  முன்னதாகவே ல்லிதா  வீடு திரும்பினாள். வீடு சுத்தமாக இருந்தது.

பதட்டமாக வந்தவள்  ஆச்சரியப்பட்டாள்.

மூன்று பேருக்கும்  சுடச்சுட காபி போட்டு கொண்டு வந்தான் சங்கர்.காபி குடித்ததும் காலியான காபி  டம்ளர்களை கையோடு கொண்டுபோய் சிங்கில் அலம்பி ஸ்டான்டில் கவிழ்த்து வைத்த நீரஜா மேசையையும்  துடைத்தாள்.பிறகு சோபாவில் அம்மாவை அணைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.


ல்லிதா  சந்தோஷத்தில் திளைத்தாள்.


“இன்னிக்கு காலைல டிபன் உங்க ரெண்டு பேருக்கும் சுடச்சுட பூரி மசாலா” என்று மகிழ்ச்சியுடன் ல்லிதா சொன்னாள்.


அவளை அன்புடன் பார்த்த சங்கர்.

“நீ ஓய்வெடு.பக்கத்து கடைல டிபன் வாங்கிட்டு வரேன்.”என்று சொன்னதோடு வேகமாகப் போய் வாங்கியும் வந்தான்.ல்லிதாவால் நடப்பதை நம்பவே முடியவில்லை. சாப்பிட்டதும் சங்கர்  கையோடு குப்பையை வெளியே போட்டார்.

ல்லிதாவிற்கு இவர்களின்  நடவடிக்கைகள் வித்தியாசமாகத் தோன்றின.ல்லிதாவுக்கு கொஞ்சம் சந்தேகம் கூட வந்துவிட்டது.

“என்ன வீடும் சுத்தமாக இருக்கு.நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ மாறி இருக்கீங்க? யார் செய்த மாயம் இது.நான் இல்லாநபோது யாராவது வந்தாங்களா என்ன?”என்று கேட்டுவிட்டாள் ல்லிதா.


“ஆமாம்மா வந்தாங்க.” நீரஜா சிரித்துக்கொண்டே  சொன்னாள்.


“யாரவங்க” ல்லிதா பதட்டத்துடன் கேட்டாள்.

“அவங்கதான்….கரப்பான்பூச்சிகள்…அவங்களாலதான் உங்களோட அருமையே எங்களுக்குப் புரிஞ்சிதுமா…சாரிம்மா உங்கள ரொம்ப கஷ்டபடுத்தியிருக்கேன்.…” என்று  நீரஜா  சோகமான குரலில் சொன்னதும்

“ஆமாம் ல்லிதா உன்னோட உழைப்பை நான் மதிக்காம.உன்னோட கஷ்டமான நேரத்துல இரக்கமே இல்லாம நானும் உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்.” கண்கலங்கி சங்கர் சொன்னபோது,

“இதுதானா நான் என்னவோ ஏதோனு பயந்துட்டேன்.நீங்க கண்கலங்கி நிக்கிற அளவுக்கு இங்க எதவுமே தப்பா நடந்துடல” என்று கூலாக சொன்ன ல்லிதா தன் முந்தானையால் சங்கரின் கண்களை துடைத்துவிட்டாள்.

“மை டியர் கரப்பான் பூச்சிகளே…..எங்கள் இருவருக்கும் என் மனைவியின் மதிப்பை புரிய வைத்த்தற்கு நன்றி“ என்று வாய்விட்டு நன்றி சொன்னான் சங்கர்.